நியாயாதிபதிகள் - 20
1. அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.
2. சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்,
3. இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.
4. அப்பொழுது கொலைசெய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்.
5. அப்பொழுது கிபியாபட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலைசெய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்து கொண்டு, என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள்; அதினாலே அவள் செத்துப்போனாள்.
6. ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.
7. நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம் பண்ணுங்கள் என்றான்.
8. அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது.
9. இப்பொழுது கிபியாவுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம்.
10. பென்யமீன் கோத்திரமான கிபியாபட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானியதவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறு பேரில் பத்துப்பேரையும், ஆயிரம்பேரில் நூறுபேரையும், பதினாயிரம்பேரில் ஆயிரம்பேரையும், தெரிந்தெடுப்போம் என்றார்கள்.
11. இஸ்ரவேலரெல்லாரும் ஒன்றுபோல ஏகோபித்துப் பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி,
12. அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?
13. இப்பொழுது கிபியாவில் இருக்கிற பேலியாளின் மக்களாகிய அந்த மனுஷரை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை விட்டு விலக்கும்படிக்கு, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்; பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,
14. இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம் பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.
15. கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது.
16. அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட இடதுகை வாக்கான எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கள் எறிவார்கள்.
17. பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.
18. இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ண வேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.
19. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
20. பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
21. ஆனாலும் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.
22. இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் திடப்படுத்திக்கொண்டு, முதல்நாளில் அணிவகுத்து நின்ற ஸ்தலத்திலே, மறுபடியும் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.
23. அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்; அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார்.
24. மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீன் புத்திரர் கிட்டச் சேருகிறபோது,
25. பென்யமீன் கோத்திரத்தாரும் அந்நாளிலே கிபியாவிலிருந்து அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து, பின்னும் இஸ்ரவேல் புத்திரரில் பட்டயம் உருவுகிற பதினெண்ணாயிரம்பேரைத் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள்.
26. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு,
27. கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்நாட்களில் அங்கே இருந்தது.
28. ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான்; எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
29. அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கிபியாவைச் சுற்றிலும் பதிவிடையாட்களை வைத்து,
30. மூன்றாம்நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டுதரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள்.
31. அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பது பேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.
32. முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன்புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள்.
33. அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தங்கள் ஸ்தானத்திலிருந்து எழும்பி, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; இஸ்ரவேலரில் கிபியாவின் பள்ளத்தாக்கிலே பதிவிருந்தவர்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு,
34. அவர்களில் எல்லா இஸ்ரவேலிலும் தெரிந்துகொள்ளப்பட்ட பதினாயிரம்பேர் கிபியாவுக்கு எதிரே வந்தார்கள்; யுத்தம் பலத்தது; ஆனாலும் தங்களுக்கு விக்கினம் நேரிட்டது என்று அவர்கள் அறியாதிருந்தார்கள்.
35. கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள்.
36. இஸ்ரவேலர் கிபியாவுக்கு அப்பாலே வைத்த பதிவிடையை நம்பியிருந்தபடியினாலே, பென்யமீனருக்கு இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரருக்குக் காணப்பட்டது.
37. அப்பொழுது பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின்மேல் பாய்ந்து பரவி, பட்டணத்தில் இருக்கிறவர்களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள்.
38. பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது.
39. ஆகையால் இஸ்ரவேலர் யுத்தத்திலே பின்வாங்கினபோது, பென்யமீனர்: முந்தின யுத்தத்தில் நடந்ததுபோல, அவர்கள் நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்களே என்று சொல்லி, இஸ்ரவேலரில் ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள்.
40. பட்டணத்திலிருந்து புகையானது ஸ்தம்பம்போல உயர எழும்பினபோது, பென்யமீனர் பின்னாகப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினிஜுவாலை வானபரியந்தம் எழும்பிற்று.
41. அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து,
42. இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
43. இப்படியே பென்யமீனரை வளைந்து கொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்.
44. இதினால் பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள்.
45. மற்றவர்கள் விலகி, வனாந்தரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை வழிகளிலே கொன்று, மற்றவர்களைக் கீதோம்மட்டும் பின் தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டார்கள்.
46. இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம் பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள்.
47. அறுநூறுபேர் திரும்பிக்கொண்டு ஓடி, வனாந்தரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்குப் போய், ரிம்மோன் கன்மலையிலே நாலு மாதம் இருந்தார்கள்.
48. இஸ்ரவேலரோ பென்யமீன் புத்திரர் மேல் திரும்பி, பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப் போட்டார்கள்.
✝️ About Jesus Christ
Jesus Christ is the central figure of Christianity, believed to be the Son of God and the Savior of the world. Born in Bethlehem over 2,000 years ago, He lived a life of compassion, humility, and truth. Through His teachings, He revealed God’s love and the way to eternal life. He performed miracles, healed the sick, and offered hope to the brokenhearted. Jesus willingly gave His life on the cross to atone for the sins of humanity. Three days later, He rose from the dead, conquering sin and death. His resurrection offers the promise of salvation to all who believe in Him. His words continue to guide millions toward faith, forgiveness, and peace. Today, He is worshipped as Lord and King, and His message transcends time and culture. Jesus invites everyone to follow Him and experience the fullness of life that only He can give.